Archives: ஜூலை 2020

பிரகாசிக்கும் ஒளி

எங்களுக்கு அருகிலுள்ள ஓர் ஆலயத்தில், ஐந்து வாரங்கள் வேதாகம வகுப்பு எடுக்கும்படி, நான் ஒப்புக்கொண்டதிலிருந்து, எனக்கு சற்று  நடுக்கமாக இருந்தது. அந்த மாணவர்கள் இதை விரும்புவார்களா? அவர்கள் என்னை விரும்புவார்களா? என்பதாக என்னுடைய எதிர்பார்ப்பு தவறான காரியங்களின் மீது திருப்பப் பட்டது, அதனால், நான் அதிகமாக தயாரிக்க ஆரம்பித்தேன்- பாடத் திட்டங்கள், மின்னணு தகடுகள், வகுப்பில் கொடுக்க வேண்டிய கைப்பிரதிகள் என பல தயாரிப்புகளைச் செய்தேன். இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், நான் இன்னமும் அநேகரை அதில் கலந்து கொள்ளும்படி அழைக்கவில்லை.

 இந்த வகுப்பு, தேவனுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கும் ஒரு தேவ பணி என்பதை ஜெபத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இந்த வகுப்பின் மூலம், பரிசுத்த ஆவியானவர் மக்களை பரலோகத்      தந்தைக்கு நேராக திருப்புவார் என்பதை அறிந்து கொண்ட நான், என்னுடைய உரையைக் குறித்த பயத்தை அகற்றி விட்டேன். மலைப் பிரசங்கத்தின் போது, இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத்.5:14-15). என்றார்.

இந்த வார்த்தைகளை வாசித்த நான், ஊடகத்தின் வாயிலாக ஓர் அறிவிப்பை வெளியிட்டேன். உடனடியாக, மக்கள் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.  தங்களின் நன்றியையும், ஆர்வத்தையும் தெரிவித்தனர். அவர்களின் பதிலைப் பார்த்த நான், இயேசுவின் போதனையான, “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக் கடவது” (வ.16) என்பதை அதிகமாக தியானித்தேன்.

அந்தக் கண்னோட்டத்துடன், நான் அந்த வகுப்பில், மகிழ்ச்சியோடு கற்றுக் கொடுத்தேன். என்னுடைய எளிய செயல், பிறரை ஊக்கப்படுத்தி, தேவனுடைய ஒளியைப் பிரகாசிக்கும்படி வழி நடத்துமாறு ஜெபிக்கின்றேன்.

தேவையுள்ளோரைத் தொடு

அன்னை தெரெசா, சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்ற செய்தி நம்மை ஆச்சரியப் படுத்துவதாக இல்லை, ஏனெனில், அனைவரின் எதிர்பார்ப்பின் படி, “பசியாயிருப்போர், ஆடையில்லாதிருந்தோர், வீடற்றவர், குருடர், குஷ்டரோகிகள், சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டோர், அன்பு கூர முடியாதவர், சமுதாயத்தினரால் கவனிக்கப் படாதவர், இவர்களின் பெயரால்” அவர் இந்த விருதைப் பெற்றார். இத்தகையோருக்குப் பணிசெய்வதற்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.

சூழ் நிலைகள் எவ்வாறு இருப்பினும், தள்ளப்பட்டவர்களை அன்பு செய்வதும், பாதுகாப்பதும் எப்படி என்பதை இயேசு காட்டினார். நோயுற்றோரைக் காட்டிலும் ஓய்வு நாள் சட்டத்தை அதிகமாக மதித்த மதத் தலைவர்களைப் போன்று அல்லாமல், இயேசு வேறுபட்டு செயல் பட்டார் (லூக்.13:14). இயேசு தேவாலயத்திலே ஒரு பெலவீனமான பெண்ணைப் பார்த்த போது, அவள் மீதுள்ள இரக்கத்தினால், மனதுருகினார். அவளுடைய சரீர குறைபாட்டையும் தாண்டி, தேவனுடைய அழகிய படைப்பு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் அவளைத் தன்னிடம் அழைத்தார்,  விடுதலையாக்கப் பட்டாய் என்று கூறி, “அவள் மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப் படுத்தினாள்” (வ.13). அவளைத் தொட்டதினால், அது ஓய்வு நாளாக இருந்ததால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான். ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிற (லூக்.6:5) இயேசு, இரக்கத்தோடு, பதினெட்டு ஆண்டுகள், வசதியற்ற நிலையிலும், அவமானத்திற்கும் உள்ளான அவளைச் சுகப்படுத்தும்படி தெரிந்து கொண்டார்.

 நாம் எத்தனை முறை நம்முடைய இரக்கத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் தவறி இருக்கிறோம் என்று  நினைத்துப் பார்த்தேன். மற்றவர்களின் தகுதிக்கு நாம் ஏற்றவர்கள் அல்ல என்பதால், நாம் தள்ளப் பட்டோமா? சக மனிதர்களைக் காட்டிலும் சட்டங்களை உயர்வாக மதிக்கும், உயர்தர மதத் தலைவர்களைப் போலல்லாமல்,  நாம் இயேசுவை மாதிரியாகப் பின்பற்றுவோம், பிறரை இரக்கத்தோடும், அன்போடும், மதிப்போடும் பார்ப்போம்.

அறிவுக்கு அப்பாற்பட்ட இரக்கம்

விஜய் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்ததால், சுரேஷின்  நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கமுடிந்தது. இருவரும் நண்பர்களாய் இருந்தனர். விஜய் அந்த நிறுவனத்தின் லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததை அறிந்த போது சுரேஷ், மிகவும் வருத்தப்பட்டான், கோபப்பட்டான், ஆனால், கிறிஸ்துவின் விசுவாசியான, அவனுடைய பாஸ் அவனுக்கு ஞானமான ஆலோசனை வழங்கினார். விஜய் மிகுந்த வெட்கத்தால், மனம் வருந்துவதை அவனுடைய பாஸ் கண்டார். அவர் சுரேஷிடம், விஜய் மீதுள்ள குற்றச் சாட்டுகளனைத்தையும் கைவிட்டு விட ஆலோசனை கூறினார், அவர் விஜயை வேலைக்கு அமர்த்தினார்.  “அவன் இழப்பைச் சரிக்கட்டும் வரை, அவனுக்கு சாதாரண அளவு சம்பளம் மட்டும் வழங்கு, நீ இவனைப் போல அதிக நன்றியும் உண்மையும் உள்ள ஒரு வேலையாளைப் பார்க்க முடியாது” என்றார். சுரேஷ் அப்படியே செய்தார், விஜயும் அப்படியே மாறினான்.

சவுல் அரசனின் பேரனான மேவிபோசேத் எந்த தவறும் செய்யவில்லை, ஆனாலும், தாவீது அரசனான போது, அவன் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தான். அநேக ராஜாக்கள், முந்தைய அரச பரம்பரையினரை கொன்று விடுவர். ஆனால், தாவீது, சவுல் அரசனின் மகனான யோனத்தானை நேசித்தான், எனவே அவனுடைய மகனை தன்னுடைய மகனாகப் பாவித்தான். (2 சாமுவேல் 9:1-13). அவனுடைய இரக்கம் ஒரு நண்பனின் வாழ்வைக் காப்பாற்றியது. அப்பொழுது மேவிபோசேத் ஆச்சரியப் பட்டு, “ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய மற்றப் படியல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்” (19:28) என்றான். அவன் தாவீதுக்கு உண்மையாய் இருந்தான். தாவீதின் மகனான அப்சலோம் தாவீது அரசனை எருசலேமை விட்டு துரத்திய போதும் இவன் உண்மையாயிருந்தான் (2 சாமு.16:1-4; 19:24-30).

 நீயும் வாழ்க்கை முழுமைக்கும் உண்மையாய் இருக்கும் நண்பனைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றாயா? ஒரு வித்தியாசமான நபர் உன்னிடமிருந்து, வித்தியாசமான ஒன்றை எதிர் பார்க்கலாம். உன்னுடைய அறிவு ஒருவரைத் தண்டிக்குமாறு கூறலாம், ஆனாலும் இரக்கத்தை தெரிந்து கொள். அவர்களின் பொறுப்பை உணரும்படி செய், தகுதியற்றவர்களாக இருப்பினும், தவறை சரி செய்ய வாய்ப்பளி. இவரை நன்றியும் உண்மையும் உள்ள நண்பனாகக் காணமுடியும். நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட இரக்கத்தோடு சிந்தி.

துயரத்தின் மத்தியில் தேவனை நம்புதல்

“பப்பா ஜாண்” என்று அழைக்கப் படும் ஒரு மனிதன் தான் புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக அறிந்து கொண்டான். அவனும் அவனுடைய மனைவி கேரலும், நோயோடு தாங்கள் செய்யும் பயணத்தைக்குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள தேவன் விரும்புகின்றார் என்பதை உணர்ந்தனர். அவர்களுடைய பாதிப்பின் வழியாகவும் தேவன் செயல்பட முடியும் என்பதை விசுவாசித்தனர். அவர்களின் மகிழ்ச்சி, துயரம் மற்றும் வேதனை நேரங்களை, இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் பதித்து வந்தனர்.

தன்னுடைய கணவன் “இயேசுவின் விரிந்த கரத்தினுள் சென்று விட்டார்” என்று கேரல் எழுதிய போது, நூற்றுக் கணக்கானோர் பதிலளித்தனர். கேரலின் வெளிப்படையான பகிர்வுக்காக அநேகர் நன்றி கூறினர். கிறிஸ்தவர்களின் மரணம் பற்றி கேட்பது ஒரு வகையில் நன்மையானது, ஏனெனில், “நாம் அனைவரும் ஒரு நாள்  மரிக்கப் போகின்றோம்” என்பதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், நாங்கள் இந்த தம்பதியரை நேரடியாகப் பார்த்ததில்லை எனினும், அவர்கள் தேவன் பேரில் கொண்டுள்ள  நம்பிக்கையைப் பார்த்து,  நாங்களும் எங்களுடைய வாழ்வில் சொல்ல முடியாத அளவு ஊக்கத்தைப் பெற்றுக் கொண்டதாக    தெரிவித்திருந்தார்.

 சில வேளைகளில் பப்பா ஜாண், தாங்கமுடியாத அளவு வேதனையைச் சகித்த போதும், அவனும் கேரலும் தங்களின் கதையை பகிர்ந்து கொள்வதன் மூலம், தேவன் அவர்களை எப்படி தாங்கினார் என்பதை வெளிப்படுத்தினர். அவர்களின் சாட்சி, தேவனுக்கென்று கனி தரும் என்பதை அறிந்திருந்தனர். பவுல் துன்பங்களைச் சகித்த போது, தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராய் இருக்கிறார் என்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ.1:12) என்றார்.

நாம் நேசிக்கும் நபரின் மரணம் மூலமாகவும் தேவன், நாம் அவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தை (பிறரின் விசுவாசத்தையும்) கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும் (வ.9) பெலப்படுத்த முடியும். நீயும் வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றாயா?  ஆறுதலையும் சமாதானத்தையும் நம் தேவனால் தர முடியும் என்பதை அறிவாயாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.